அரச ஊழியர்கள் கடமைநேரங்களில் அலைபேசியை பயன்படுத்துவதனால் வருடத்துக்கு, 18 இலட்சம் நேரத்தை வீணடிக்கின்றனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார். நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற உள்நாட்டலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நிர்வாக பிரச்சினைகள் உள்ளன.
அவற்றை கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகத்திவேயே அரச ஊழியர்கள் அதிகமாக இருக்கின்ற நாடு, இலங்கையாகும். உலகளாவிய ரீதியில் 250 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலேயே அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இலங்கையை பொறுத்தவரையில் 25 பேருக்கு ஒருவர் என்ற வீதத்திலேயே இருக்கின்றனர் என்று சபாநாயகர் கருஜயசூரிய, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக இருந்தபோதே, தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மட்டும் 14 இலட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர். எனினும், வேலைநாட்களில் அலைபேசிகளை பயன்படுத்துவதனால் வருடத்துக்கு 18 இலட்சம் மணிநேரம் வீணடிக்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.
குடாநாட்டில் கஸ்டப்பிரதேசமான பிரதேசங்களுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு வழக்கப்படும் கொடுப்பனவும் போதுமானதாக இல்லை. நெடுந்தீவுக்கு செல்லும் அரச ஊழியர்களுக்கு கொடுப்பனவாக 2,500 ரூபாய் வழங்கப்படுகின்றது. அத்தொகையை 5,000 ரூபாயாக அதிகரிக்கவேண்டும். அதேபோல, யாழ். குடாநாட்டில் ஏனை தீவுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கான கொடுப்பனவை 3,000 ரூபாவாக அகதிகரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் -